பல வருடங்களாக இந்தியாவில் பைக் பிரியர்களிடம் தனி அந்தஸ்து பெற்று விளங்கியது ராயல் என்ஃபீல்ட் பைக்குகள்.
ராயல் என்ஃபீல்ட் புல்லட், கிளாசிக் 350, கிளாசிக் 500, காண்டினேண்டல் ஜிடி, ஹிமாலயன், இண்டர்செப்டர் 650 என பல மாடல்களை ராயல் என்ஃபீல்ட் அறிமுகம் செய்தது. அதில் பல மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், சமீப காலமாக ராயல் என்ஃபீல்ட் பைக்கின் மவுசு குறைய துவங்கியுள்ளது. இதற்கு அந்நிறுவனத்தின் விற்பனை விகிதமே சாட்சி.
ஜாவா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது.
பிப்ரவரி 2019 –ல், 62,630 பைக்குகளை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் விற்றுள்ளது. இது கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தை ஒப்பிடும் போது 14 சதவிகிதம் குறைவாகும். பிப்ரவரி 2018 –யில் 73,077 பைக்குகளை ராயல் என்ஃபீல்ட் விற்றது குறிப்பிடத்தக்கது.
‘2018 ஆம் ஆண்டின் கடைசி பகுதி, பைக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மிகவும் கடினமான காலகட்டமாகும். இன்சூரன்ஸ் பாலிசியில் மாற்றங்கள், பைக் தயாரிப்பு பொருட்களின் விலை உயர்வு முதலியவை இதற்கு காரணமாக கூறலாம். இதனால் தான் பிப்ரவரி மாதத்தில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் விற்பனையில் சிறு சரிவு ஏற்பட்டுள்ளது. இது தற்காலிகமானது என நம்புகிறேன்' என எய்சர் மோட்டர்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஒ சித்தார்த் லால் தெரிவித்தார்.
ஏற்றுமதியில் ராயல் என்ஃபீல்ட் பைக்குள் புது சாதனையை படைத்துள்ளது. பிப்ரவரி 2019 -ல் மட்டும் 2564 பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 2018 யை ஓப்பிடும் போது இது 49 சதவிகிதம் உயர்வாகும்.
வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.
